ஆபரேஷன் சிந்தூரில் பெண் இராணுவ வீரர் கிரண் ஷெகாவத் வீர மரணம் என பரவும் காணொளி – உண்மை என்ன?
முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் (27) வீர மரணம்

Claim :
முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் (27) வீர மரணம்Fact :
இந்திய கடற்படையின் லெப்டினன்டாக இருந்த கிரண் ஷெகாவத், கடந்த 2015 மார்ச் 24 பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தார்.
Factcheck : இந்திய கடற்படை வீரர் கிரண் ஷெகாவத் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று பரப்பப்படும் காட்சி, ஒரு பழைய காணொளி ஆகும். அவர் 2015 மார்ச் 24 அன்று பணியில் இருக்கும் பொழுது ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் அன்று பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடைப்பெற்றது. அக்கோர சம்பவத்தை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படைகள் பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை முன்னெடுத்தன. அந்நிகழ்வினை தொடர்ந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற இராணுவ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்நிகழ்வினை தொடர்ந்து சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அமைதி நிலவிவரும் இச்சூழலில் சமூக வலைதளங்களில் அடிக்கடி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரானுவ வீரர்களைப் பற்றிய தவறான தகவல்கள் பரவுவதைக் காணலாம். அந்த வகையில், “இந்தியாவின் முதல் பெண் வீரராக கடமையின் போது, போரில் பங்கேற்று வீரமரணம் அடைந்தவர் லெப்டினன்ட் கிரண் ஷெகாவத் என்ற தகவல் கடந்த சில நாட்களாக வைரலாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த தகவலை உண்மையென நம்பி, பலர் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வீர மரணத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக சமூக ஊடகங்களில்,
முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் (27) வீர மரணம் என X- தளம் மற்றும் முகநூலிலும் பயனாளர்கள் பகிர்ந்துள்ளனர்.
"இந்தியாவின் முதல் பெண் சிப்பாய் லெப்டினன்ட் கிரண் ஷெகாவத், போரில் பங்கேற்று, தைரியமாக எதிர்த்து, வீரமரணம் அடைந்தார். அவரை நம்மால் மறக்க முடியாது..." என்று கூறப்பட்டுள்ளது. இப்பதிவுகளில் கிரணின் புகைப்படம் மற்றும் அவரது பெயருடன் உணர்வுபூர்வமான வாசகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அந்த விவரங்கள் அடங்கிய இணைப்பினை இங்கே காணலாம்
மற்றொரு பயனாளர் தனது பக்கத்தில்,
ஐயோ தாயே உன்னை இழந்துவிட்டோமே! – இவ்வாறு கிரன் ஷெகாவத் அவர்களின் காணொளியுடன் பதிவிட்டிருந்தார்.
உண்மை சரிபார்ப்பு:
மக்கள் மனதில் போர் பதற்றமும் பாதுகாப்பு மீதான ஐயமும் இருக்கும் இச்சூழலில் இதுபோன்ற தகவல்களின் உண்மைத் தன்மையை தெலுங்கு போஸ்ட் உண்மைச் சரிபார்ப்பு குழு கண்டறிந்து போலிச் செய்திகளை தவிர்க்க துணை நிற்கிறது. தொடர்ந்து தெலுங்கு போஸ்ட் உண்மைச் சரிபார்ப்பு குழு லெப்டினன் கிரண் பற்றிய தகவலை ஆய்வுக்குட்படுத்தியது.
அவர்பற்றி முதலில் கூகுள் தேடலில் முக்கிய வார்த்தைகளை கொண்டு தேடினோம். அப்போது ‘கிரண் ஷேகாவத் ஒரு வீராங்கனை என்பது உண்மைதான். ஆனால், அவர் பாகிஸ்தான் உடனான போரில் உயிரிழக்கவில்லை. 2015 ஆம் ஆண்டே பயிற்சியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்’ எனத் தெரியவந்தது.
மேலும் அந்த காணொளியினை புகைப்படங்களாக கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச்-ல் தேடியபோது இந்தச் செய்தியினைப்பற்றி பல்வேறு ஊடகங்கள் 2015ல் செய்திகள் வெளியிட்டிருப்பதை கண்டோம். மேலும் அதில் கிரண், 2010-ல் இந்திய கடற்படை அகாடமியில் சேர்ந்தவர். 2012-ல் ‘அப்சர்வர்’ பட்டம் பெற்று INAS 310 எனும் விமானப் பிரிவில் பணியாற்றினார். 2015 ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின அணிவகுப்பில் கடற்படை பெண்கள் அதிகாரிகளுடன் தன்னம்பிக்கையாக பங்கேற்றார்.
கடந்த மார்ச் 24, 2015 அன்று, கோவா அருகே கடற்படையின் டோர்னியர் விமானம் பயிற்சி பறப்பில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது. அதில் கிரண் மற்றும் துணை பைலட் லெப்டினன்ட் அபினவ் நகோரி உயிரிழந்தனர். இது போர்க்களம் சார்ந்த நிகழ்வு அல்ல; பயிற்சி பணியின் போது ஏற்பட்ட துயரமான விபத்தாகும்.
இந்த உண்மைச் சம்பவம் குறித்து 2015ல் வெளிவந்த செய்திகளின் விவரங்களை இங்கே காணலாம்.
என்.டி.டிவி (NDTV) வெளியிட்ட செய்தியின் இணைப்பு :
TOI ஊடகத்தில் வெளியிட்ட செய்தியின் இணைப்பு :
முடிவு :
கிரண் ஷெகாவத் ஒரு திறமையான இந்திய கடற்படை அதிகாரியாக இருந்தார். அவர் தனது கடமையில் வீரமரணம் அடைந்தவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பாகிஸ்தான் உடனான போரில் உயிரிழந்தார் என்ற தகவல் தவறானது. அச்செய்தி காண்போரை உணர்ச்சிவயமாக்கும். எனவே இதுபோன்ற உணர்ச்சிமிக்க பதிவுகளில் உண்மையை அறிந்து பகிர்வது மிக முக்கியமானது, குறிப்பாக இரானுவ வீரர்களைப் பற்றிய செய்திகளைப் பகிரும் போது உண்மைத் தகவல்களை சரிபார்த்து செயல்பட வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.