தமிழகத்தில் மின் கட்டண உயர்வு என வைரலாகும் அட்டவணை? - உண்மை இதுதான்
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகவும், புதிய மின் கட்டண அட்டவணை எனவும் பழைய நியூஸ் கார்டு பரவி வருகிறது.

Claim :
தமிழகத்தில் மின் கட்டணம் உயரவுள்ளதாக வைரலாகும் அட்டவணை பட்டியல்Fact :
வைரலாகும் மின் கட்டண அட்டவணை 2022ஆம் ஆண்டு வெளியான பழைய பட்டியலாகும்.
தமிழகத்தில் மின் வாரியம் மூலமாக மின் விநியோகம் நடைபெற்று வரும் நிலையில், வீட்டு உபயோகம், வணிய பயன்பாடு, தொழிற்சாலை இணைப்புகள் என ஏறத்தாழ 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், அதற்கு பிறகான மின்சார பயன்பாட்டிற்கே கட்டணமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2022ஆம் ஆண்டு பெரிய அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், மற்ற மாநிலங்களவை விட மின் கட்டணம் குறைவுதான் என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது. சமீப நாட்களாக தமிழகத்தில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலாகப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பரவும் தகவல்
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு என ஒரு அட்டவணை சமூக வலைதளங்களில் சில நாட்களாக பரவி வருகிறது. அதில் பழைய கட்டணம், புதிய கட்டணம் என விலைப்பட்டியல், எவ்வளவு ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.
பொ.க.பிரேம் நாத் என்ற எக்ஸ் பயனர், “தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு” என்று குறிப்பிட்டு வைரல் கார்டை பகிர்ந்திருந்தார்.
மேலும் இணைப்பு 1 (Archive), இணைப்பு 2 (Archive), இணைப்பு 3 (Archive) ஆகிய சமூக ஊடகப் பக்கங்களிலும் மின் கட்டணம் உயர்வு என்று குறிப்பிட்டே வைரல் பதிவை ஷேர் செய்திருந்தனர்.
உண்மை சரிபார்ப்பு
வைரலாகும் அட்டவணை கார்டு குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், அது பழைய அட்டவணை என்பது தெரியவந்துள்ளது.
முதலில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறதா என்பது குறித்து கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் சர்ச் செய்தோம். தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயர்வு? என்ற தலைப்பில் கடந்த மே 19ஆம் தேதி வெளியிட்ட தினமணி செய்தி அறிக்கை TeluguPost உண்மை கண்டறியும் குழுவுக்கு கிடைத்தது.
அதில், “தமிழகத்தில் 2025 ஜுலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழக மின்சார வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவு உயா்த்த வேண்டும் என்பதை துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர் முதல்வா் இது குறித்த முடிவுகளை எடுப்பார்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, வைரலாகும் அட்டவணை எப்போது வெளியான என்பதை ஆய்வு செய்ய ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி இந்து தமிழ் திசை இணையதளம் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அதில், வைரலாகும் அட்டவணை இருப்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டறிந்தது.
இந்து தமிழ் திசை செய்தி அறிக்கையில், மின் கட்டண உயர்வு 2022 செப்டம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது என்றும் தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு என்று மின்வாரியம் தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் நமது தேடலில் இதே மின் கட்டணப் பட்டியலை புதிய தலைமுறை மற்றும் பாலிமர் தொலைக்காட்சியும் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ளதை உறுதி செய்துகொண்டோம்.
இதன்மூலம் வைரலாகும் நியூஸ் கார்டு 2022ஆம் ஆண்டு வெளியான பழைய மின் கட்டண உயர்வு அட்டவணை தொடர்புடையது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
மேலும், தமிழக அரசு மின் கட்டண உயர்வு தொடர்பாக விளக்கம் அளித்துள்ளதா என்பதை TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு தேடியது. மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடந்த மே 20ஆம் தேதி அளித்த விளக்கம் கிடைத்தது.
அதில், “கடந்த சில நாட்களாக ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இப்போது மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.
எனினும், ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டணம் தொடர்பான ஆணையை அமல்படுத்தும்போது, அதனை வழங்கிடும்போது, வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது என்றும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடர வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
வைரல் அட்டவணையில் உள்ளபடி 2022ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட கட்டணம்தான் தமிழ்நாட்டில் தற்போது வசூலிக்கப்படுகிறதா அல்லது கட்டணம் உயர்ந்துள்ளதா என தேடினோம். 2024ஆம் ஆண்டும் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது நமக்கு தெரியவந்தது. மின் கட்டண உயர்வு குறித்து ஜூலை 17, 2024 அன்று நியூஸ் 18 தமிழ்நாடு யூட்யூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 100 யூனிட்டுக்கும் வசூலிக்கப்படும் உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள் உள்ளன.
இதேபோல சன் நியூஸ் யூட்யூப் சேனலிலும் மின் கட்டண உயர்வு தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டு இருந்த கட்டணத்தை விட தற்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளதை TeluguPost உறுதி செய்தது.
முடிவு
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அட்டவணை என சமூக வலைதளங்களில் பரவும் நியூஸ் கார்டு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. தற்போது தமிழ்நாட்டில் எவ்வித மின் கட்டணம் உயர்வும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை உறுதி செய்துகொண்டு வெளியிடும்படி TeluguPost உண்மை சரிபார்ப்புக் கு ழு கேட்டுக்கொள்கிறது.